கிளிநொச்சியில் கோவிட் சமூக தொற்றாக மாற்றமடையவில்லை - சரவணபவன்
கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் வைரஸ் பரவல் இதுவரை சமூக தொற்றாக
மாற்றமடையவில்லை என்று மாவட்ட சுகாதார வைத்திய பணிபபாளர்
வைத்திய கலாநிதி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மேலும் சுமார் ஆயிரம் கோவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவிட் பரவல் மற்றும் கந்தபுரம் கரும்பு தோட்ட காணி விடயம் உள்ளிட்ட விடயங்களை ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கோவிட்
தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே
இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் கோவிட் தொற்றாளர்களுக்கான வைத்திய வசதிகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அனைத்து இடங்களிலும் சமகாலத்தில் வைத்திய சேவையை மேற்கொள்வதற்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இது தொடர்பாக சுகாதார திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று, போக்குவத்துக்களுக்கான வாகன வசதி போன்ற சில தேவைகள் தொடர்பாகவும் வைத்திய அதிகாரியினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இவை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
மாவட்டத்திற்கான தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கிய கோரிக்கையை எழுத்து மூலம் தரும்படி கேட்டுக்கொண்டதுடன் ,அமைச்சரவையிலும் சுகாதார அமைச்சருடனும் கலந்துரையாடி தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், கோவிட் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தில் அரச அதிகாரிகள் அனைவரும் சுய பாதுகாப்புடன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கடற்றொழில் அமைச்சர், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுமாயின் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் தெரிவித்தார்.
