இலங்கையில் இரு நாட்களில் 49 பேரைப் பலியெடுத்த கோவிட் வைரஸ்
இலங்கையில் கடந்த இரண்டு நாள்களில் 49 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி நாட்டில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 850ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 23 கோவிட் மரணங்களும், நேற்றுமுன்தினம் 26 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினமே நாட்டில் அதிகளவு கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. வத்தேகம பகுதியைச் சேர்ந்த 3 மாத குழந்தை ஒன்றும் கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளது.
அத்துடன் அன்றைய தினம் 14 ஆண்களும், 11 பெண்களும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேற்று 15 ஆண்களும், 8 பெண்களும் என 23 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் 2021 ஜனவரி மாதம் முதல் மே 12ஆம் திகதி (இன்று) காலை வரையில் 82 ஆயிரத்து 598 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளது எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி ஜனவரி மாதம் 20 ஆயிரத்து 696 பேரும், பெப்ரவரி மாதம் 19 ஆயிரத்து 85 பேரும், மார்ச் மாதம் 9 ஆயிரத்து 463 பேரும், ஏப்ரல் மாதம் 15 ஆயிரத்து 440 பேரும் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளர்.
அத்துடன் இம்மாதத்தில் மே 1 முதல் 11ஆம் திகதி காலை வரை 22 ஆயிரத்து 914
பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளது.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.