யாழில் தீவிரமடைந்துள்ள அபாயம் - மக்களுக்கு கடும் எச்சரிக்கை
யாழ். மாவட்டத்தில் கோவிட் பெருந்தொற்று அபாயம் மிக தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தம் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் அறிவித்துள்ள பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதனை மிக அத்தியாவசியமான தேவைகளுக்கு மாத்திரமே மக்கள் பிரயோகிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் இன்று 148 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளர்கள் எண்ணிக்கை 10166 ஆக உயர்ந்துள்ளதுடன், கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்ட மரணங்கள் 200 ஆக உயர்ந்திருக்கின்றது.
மே மாதத்தின் பிற்பகுதியிலேயே இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. இன்றுவரை 3019 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8616 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
வேலணை பிரதேசத்தில் ஒரு கிராமம் முற்றாக முடக்கப்பட்டிருக்கிறது. மேலும் தற்போது தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை சராசரியாக 130 வரை காணப்படுகின்றது. இது மோசமான அதிகரிப்பாகும்.
அரசாங்கம் அறிவித்துள்ள பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதனை மிக அத்தியாவசியமான தேவைகளுக்கு மாத்திரமே மக்கள் பிரயோகிக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் சில கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வைரஸ் தொற்றானது திரிபுடன் பரவுவதால் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
10 நாட்களில் வீடுகளில் இருப்பது எமது மாவட்டத்தையும், நாட்டையும் மோசமான நிலையிலிருந்து மீட்பதற்கு உதவியாக இருக்கும். எனவே மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது பாதுகாப்பானாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
