அறிகுறிகளற்ற கோவிட் தொற்றாளர்களுக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம்: ஹேமந்த ஹேரத்
கோவிட் தொற்றுக்கு உள்ளானோருக்கான தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது எவ்வித தொற்று அறிகுறிகளும் அற்ற, உடலில் மிகக் குறைவான வைரஸ் காணப்படும் தொற்றாளர்களே பெருமளவில் காணப்படுகின்றனர்.
எனவே தான் கோவிட் தொற்றுக்குள்ளானோருக்கான தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்றுக்குள்ளானோருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றிருப்பார்களாயின் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படத் தேவையில்லை.
கோவிட் தொற்று முதன் முதலாக இனங்காணப்பட்ட போது அது எத்தனை நாட்களுக்கு மனித உடலில் தங்கும் என்று தெரியாது. எனவே தான் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலமாக குறிப்பிடப்பட்டது.
எனினும் தற்போது ஒமிக்ரோன் பரவல் காணப்படுகின்ற போதிலும், தொற்றாளர்களிடம் வைரஸின் வீதம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு தரவுகளின் அடிப்படையில் தற்போது 7 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் போதுமானதாக கண்டறியப்பட்டுள்ளது.
அத்தோடு கோவிட் தொற்றுக்குள்ளானோருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றிருந்தால் தனிமைப்படுத்தலுக்கு உட்படத் தேவையில்லை.
காரணம் அவர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதமும், ஏனையோருக்கு தொற்றினை பரப்பும் வீதமும் மிகக் குறைவாகும்.
எவ்வாறிருப்பினும் தொற்றுறுதியானவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் இன்றி வெளியிடங்களுக்கு செல்ல முடியும் என்று கூறப்படவில்லை எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.



