கல்முனையில் கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை
அம்பாறை - கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்கு கோவிட் தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் ஆகியோர் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் இக்கலந்துரையாடலில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இக்காலத்தில் 6 கோவிட் மரணங்களும் அதிகளவான தொற்றாளர்களும் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்நிலையினை கருத்தில் கொண்டு கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்கான தடுப்பூசியை வழங்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய சன்ன ஜயசுமன சுகாதாரத்துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.