கிளிநொச்சி - ஆடை தொழிற்சாலைகள் இரண்டை மூடுமாறு கோரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் ஆடைத்தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு சார்பில் சின்னராசா ஜீவநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பை பெற்று பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றமை இம் மாவட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாகும்.
இன்றைய சூழலில், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கோவிட் அச்சுறுத்தலானது எமது மாவட்டத்திலும் பெரிதும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை ஆடைத்தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பி. சீ. ஆர் பரிசோதனையில் 60க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளிலும் பணியாற்றுகின்ற பணியாளர்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சாந்தபுரம் கிராமம் முழுமையாக இராணுவ பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, இவ்வாறு ஏனைய கிராமங்களிலும் இவ்வாறான நிலை ஏற்படாதவாறு இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடி நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி மக்களின் நடமாட்டம் அதிகளவு காணப்படுகின்றது.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பை மீறி அவர்களுக்கு வெவ்வேறு காரணங்களை கூறி மக்கள் நடமாடுகின்றனர்.
குறித்த நடமாட்டங்களை குறைத்து எங்களையும், எமது சமூகத்தையும் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.