பேலியகொடயின் ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஏழு வயது மகன் மற்றும் ஒரு மாத மகள் ஆகியோரது தந்தை ஒருவரின் மரணத்திற்கு வழிவகுத்த சித்திரவதைக்கு இழப்பீடாக பேலியகொட காவல் நிலையத்தின் ஐந்து காவல்துறை அதிகாரிகள் 10 லட்சம் ரூபாவை மனுதாரருக்கு நட்டஈடாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மான் சுரசேனா இழப்பீடாக வழங்கப்படும் 10 லட்சம் ரூபாயில் 500,000 ரூபா இரண்டு குழந்தைகளின் பெயர்களில் ஒரு அரச வங்கியில் சம பங்காக முதலீடு செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
தீர்ப்பின் படி, உயர்நீதிமன்றம் விதித்த 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டில் 750,000 ரூபாவை அரசும், தலா 50ஆயிரம் ரூபாவை ஐந்து பிரதிவாதிகளும் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட வேண்டும். இழப்பீடாக உத்தரவிடப்பட்ட தொகை தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும்.
இதேவேளை அதிர்ச்சியால் ஏற்படும் விரிவான தசை மற்றும் மென்மையான திசு கலப்புகளே மரணத்திற்கு காரணம் என்று பிரேத பரிசோதனையின் போது தெரியவந்தது.
2017, பெப்ரவரி 17ஆம் திகதி அன்று கொள்ளை ஒன்று தொடர்பில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாதிக் ஷியாமன் விக்ரமராச்சி என்பவர் காவல்துறையின் தடுப்பில் இருந்தபோது மரணமானார்.
இதனையடுத்து இறந்தவரின் மனைவி நில்மினி விஜேசேகர, நீதிக் கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றம் தமது உத்தரவை பிறப்பித்தது.