உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் விடுதலை: ஏனையோருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சி பெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்த 64பேரில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஏனைய 63பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக இன்று (15) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறு அன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
இதன்போது, ஸஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து 64 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த வெவ்வேறு இரு வழக்குகளை கொண்ட 64 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவன் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நான்கு பேர் மட்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் .
மேலும், கோவிட் தொற்று நிலைமைகள் காரணமாக நீதிமன்றிற்கு ஏனையவர்களை அழைத்துவர முடியாதது தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதன்போது ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் ஏனைய 63பேரும் எதிர்வரும் 28 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.



