களுத்துறையில் தம்பதியினர் மர்ம மரணம்!- பொலிஸார் தீவிர விசாரணை
களுத்துறை - புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகலோயா பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் வசித்து வந்த தம்பதியினர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று(14.05.2026) ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதி மக்கள் வழங்கிய அவசர தகவலுக்கமைய, பொலிஸார் இந்த இரண்டு சடலங்களையும் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த தம்பதியினர்
இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்தவர்கள் எகலோயா பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது கணவரான 65 வயதுடைய முதியவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இருவரும் இணைந்து தங்களுக்குச் சொந்தமான இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் நீண்டகாலமாக ஆடை விற்பனை நிலையம் (துணிக்கடை) ஒன்றை நடத்தி வந்துள்ளதுடன், அதன் மேல் மாடியில் தங்களின் இருப்பிடத்தை அமைத்து வசித்து வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்தத் தம்பதியினர் வெளியில் வராமலும், அவர்களின் வியாபார நிலையம் திறக்கப்படாமலும் இருந்துள்ளது.
இதன் காரணமாக சந்தேகமடைந்த அயலவர்கள், அந்தப் பகுதியில் உள்ள மற்றொரு உயரமான கட்டிடத்திலிருந்து இவர்களின் வீட்டின் மேல் மாடியைப் பார்த்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதன்போது, மேல் மாடியின் வெளிப்பகுதியில் குறித்த பெண் அசையாத நிலையில் விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகப் புளத்சிங்கள பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்தே, இந்தத் துயரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கணவனும் மனைவியும் வெவ்வேறு இடங்களில் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவரும் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்களா? அல்லது குடும்பத் தகராறு காரணமாக ஏதேனும் விபரீத முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என பல கோணங்களில் புளத் சிங்கள பொலிஸார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.