வடக்கில் பி.சி.ஆர். சோதனைகள் விரைவில் அதிகரிக்கப்பட வேண்டும்! விசேட மருத்துவ நிபுணர் சந்திம ஜீவந்தர
வட மாகாணத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சமூகத்தில் உள்ள தொற்றாளர்களை இனம் காண்பதற்கு அங்கு பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் வாயு விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேல் மாகாணத்தைப் போன்று வட மாகாணத்திலும் மக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்றார்கள். வடக்கில் சில இடங்களில் கோவிட் கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பழைய கொத்தணிகளும் உள்ளன் புதிய கொத்தணிகளும் உள்ளன. எனவே, மேல் மாகாணத்தை போன்று வட மாகாணத்திலும் பி.சி.ஆர். பரிசோதனைகளை நாள்தோறும் அதிகரிக்க வேண்டும்.
அப்போது தான் சமூகத்தில் இருக்கும் தொற்றாளர்களை விரைவில் அடையாளம் காண முடியும். நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் தான் குறித்த பகுதிகளைத்
தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க வேண்டும். ஆனால், நாட்டின் தற்போதைய
இறுக்கமான நிலைமையில் இது எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்று எமக்குத்
தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.