யாழ்ப்பாணத்தில் வெளியான கோவிட் பரிசோதனை முடிவுகளால் சர்ச்சை
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கு முதல் நாள் கோவிட் தொற்று இருக்கிறது என தெரிவிக்கப்பட்ட நிலையில் மறுநாள் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் கோவிட் பரிசோதனை முடிவுகளில் சர்ச்சை நிலவுகிறது.
இதுகுறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனிடம் கேட்டபோது இது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அது தொடர்பில் ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.
தாதிய உத்தியோகத்தருக்கும் அவரது மனைவியும் கோவிட் தொடர்பாளர்கள் என சந்தேகத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் PCR மாதிரிகள் கடந்த 25 ஆம் திகதி பெறப்பட்டிருந்தன. அதன் முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியாகின. அதில் தாதிய உத்தியோகத்தருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அவரது மனைவிக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் தாதிய உத்தியோகத்தருக்கு நேற்றுமுன்முன்தினம் மீளவும் PCR தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையால் மேற்கொள்ளப்பட்டபோது நேற்று தொற்று இல்லை என முடிவு கிடைத்துள்ளது.
இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருநாளில் கோவிட் இல்லாமல் போகுமா அல்லது மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் தவறு ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்படுகின்றது.
மேலும் தாதிய உத்தியோகத்தருக்கு முதல்நாள் தொற்று இனங்காணப்பட்டவுடன் சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்படாது மீளவும் கோவிட் பரிசோதனை செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.