ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதில் பின்நிற்கும் அநுர : எழுந்துள்ள குற்றச்சாட்டு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதில் அநுர அரசாங்கமும் பாராமுகமாக உள்ளதாக யாழ். வடமராட்சி ஊடக இல்லம் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (31) மாலை இடம்பெற்ற, சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அஞ்சலி உரை நிகழ்த்திய யாழ் வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் மயூதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் தாயகத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளரகள்
மேலும் தெரிவிக்கையில், வடமராட்சியை சேர்ந்த நடேசன் மட்டக்களப்பில் வாழ்ந்து வந்த நிலையில் தென் தமிழீழ மக்களுக்காக துணிச்சலுடன் செயற்பட்டு ஊடக செயற்பாட்டின் மூலம் துணைநின்றவர்.
அதன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதிலும் ஓய்ந்து ஒதுஙகாது இறுதி மூச்சு உள்ளவரை ஊடகப்பணி ஆற்றியவர் நடேசன்.
இறுதியாக இதே நாளில் 2004ஆம் ஆண்டு சிறீலங்கா அரச படைகளோடு சேர்ந்தியஙகிய துணை ஆயுத குழுவினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு தமிழர் தாயகத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளரகள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாத நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
ஆயுத முனையில் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்
லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலியகொட உள்ளிட்ட சிங்கள ஊடகவியலாளர்களும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.
ஆயுதg் போராட்டம் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தே வருகிறது.
அன்று ஆயுத முனையில் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் இன்று வன்முறை வடிவத்திலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயராலும் தாக்குதல்கள், விசாராணகள் என்ற வடிவங்களில் தொடர்ந்து வருகின்றன.
அநுரகுமார திசநாயக்க அரசாங்கம் பொறுப்பேற்று ஆறு மாதங்களை கடந்துள்ள போதிலும் இவ்விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது பாராமுகமாக செயற்பட்டு வருகின்றது.
ஆட்சி மாறினாலும் இதே நிலை தொடர்கின்றமையே ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் இன்றும் தொடர்வதற்கு காரணமாக அமைகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
