அரசியல்வாதிகள் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் விசாரணை
விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளுக்கு பாதகம் ஏற்படும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டதாகவே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை
இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் ஜூலை முதலாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோரப்பட்ட நிலையில், அவர்களை நீதிமன்றத்திற்கு அழைப்பது அவசியமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனினும், சம்பந்தப்பட்ட நபர்களை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கான அறிவித்தல்களைப் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என நீதவான் இதன்போது குறிப்பிட்டார்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பாகவும், சுகீஸ்வர பண்டார மற்றும் மஹிந்த பத்திரன ஆகியோருக்கு எதிராகவும் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் ஒரு கூடுதல் அறிக்கை மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சட்ட நடவடிக்கைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட வேண்டும் எனவும் மன்று குறிப்பிட்டுள்ளது.