இலங்கையில் கட்டாய நடைமுறை! நிறைவடையவுள்ள கால அவகாசம் - மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் இருதரப்பினருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை எச்சரித்துள்ளது.
வாகன உரிமையாளர்களுக்கு கால அவகாசம்
வாகனங்களின் பின்னிருக்கைகளுக்கான ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே ஜூன் 19ஆம் திகதிக்கு பின்னரான காலப்பகுதியில் இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வீதிப்பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.