கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் உணவுப்பொருட்களுக்கு சிக்கல்
கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் லொறி நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கொள்கலன் லொறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை துணைக் குழுவின் பரிந்துரைகளை உரிய அதிகாரிகள் பின்பற்றத் தவறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகம்
இலங்கை துறைமுகத்திற்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி சமீபத்தில் சுங்கத் துறைக்கு ஒதுக்கப்பட்டு, நெரிசலை குறைக்க அனைத்து வசதிகளுடன் கூடிய நிலம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த நிலத்திற்குள் ஒரு வாகனம் கூட கொண்டு வரப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக, கொள்கலன் லொறி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் உட்பட பலர் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள்
இது தொடர்ந்தால், சரக்குக் கப்பல்கள் மீண்டும் மற்ற துறைமுகங்களுக்குச் செல்லும் அபாயம் உள்ளது. மேலும் உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் கொள்கலன் லொறிகளில் இருப்பதால் காலாவதியாகும் வாய்ப்பு உள்ளது.
இந்த சூழ்நிலைகளை தணிக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.