தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒருமித்த குரலில் பேச முடியாமைக்கான காரணம் என்ன...!
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அந்த வகையில்,வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும், பௌத்த தேசியத்தைக் காக்கவும்,ஒற்றையாட்சி அரசியல் யாப்பு திருத்தங்களோடு மாத்திரம் பாதுகாக்கவும்,எதிரும் புதிருமாக இருக்கும் பிரதான சிங்களக் கட்சிகள் எப்படி ஒருமித்த குரலில் செயற்படுகிறார்கள் என்பதற்கு, இடைக்கால ஜனாதிபதிக்கான தெரிவு முறை பகிரங்கப்படுத்தியுள்ளது.
டலஸ் அழகபெருமவை சஜித் பிரேமதாச முன்மொழிகின்றார். ரணில் விக்ரமசிங்கவை தினேஸ் குணவர்த்தன முன்மொழிகின்றார். இதே மாதிரியான பண்பு, எழுபது வருடங்கள் அரசியல் போராட்டம் நடத்தி இன்றுவரை தீர்வில்லாமல் அரசியல் செய்து கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் எப்போது உருவாகும்?
ஏன் ஒருமித்த குரலில் பேச முடியாது
வெவ்வேறு கட்சிகளாக இருப்பது தவறவல்ல. ஆனால், இன அழிப்பு விசாரணை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் போன்ற பிரதான விவகாரங்களில் ஏன் ஒருமித்த குரலில் பேச முடியாமல் உள்ளது?
ரணில் - டலஸ் என்ற இருவரில் ஜனாதிபதியாக எவர் வந்தாலும், முதலில் ராஜபக்ச குடும்பத்தைப் போர் வெற்றி வீரர்கள் என்ற காரண காரியத்துடன் பாதுகாக்க வேண்டும்.

ஏனெனில், ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்தியல் போர் வெற்றியின் அடிப்படையில் எழுந்தது. இதனைத் தமிழர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
சிங்கள அரசியல் தலைவர்களுக்கு உரித்தான ஊழல் மோசடி
ஊழல்மோடி, அதிகாரத்துஸ்பிரயோகம் என்பது வேறு பிரச்சினை. அது பற்றி விசாரணை நடத்தினாலும், ஏதோ ஒரு கட்டத்தில், போர் வெற்றி வீரர்கள் என்ற கௌரவத்துடன் அது வேறு திசைக்கு மாறிவிடும். இன்று வரை கொழும்பில் வெளியான சிங்கள ஆங்கில நாளிதழ்களை அவதானித்தால். இதற்குப் பெரிய விளக்கங்கள் தேவைப்படாது.

ஊழல் மோசடி, அதிகாரத்துஸ்பிரயோகம் என்பது தனியே ராஜபக்ச குடும்பம் மாத்திரமல்ல, அது தங்களுக்கும் உரியது என்பதை ஏனைய பல சிங்கள அரசியல் தலைவர்களின் மனசாட்சியும் உறுத்தும்.
ஆகவே காலிமுகத்திடலில் இடம்பெற்ற கிளர்ச்சியின் உச்சக்கட்டமான சென்ற 9 ஆம் திகதி சனிக்கிழமை, கோட்டாபய வெளியேறியதும் பிரதான பௌத்த தேரர்கள் ஏன் மூக்கை நுழைத்தார்கள்? அந்தக் கிளர்ச்சி பௌத்த தேசிய சக்தி என்று ஓமல்பே சோபித தேரர் 12 ஆம் திகதி கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியபோது, அதன் காரண காரியம் அப்படியே வெளிப்பட்டது.
செங்கடகல பிரகடனம் வெளியிட்டமைக்கான காரணம்
பௌத்த தேசிய சக்தியை இழந்தாலேயே ராஜபக்ச குடும்பத்தைத் துரத்தியதாகவும் தேரர் மார்தட்டினார்.கோட்டாபய வெளியேறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மகாநாயக்கத் தேரர்கள், செங்கடகல பிரகடனத்தை வெளியிட்டனர்.
ஏன்? ஏப்ரல் ஒன்பதாம் திகதி தொடங்கிய போராட்டம் ஜூலை ஒன்பதாம் திகதி வெற்றியடையும் என்று தெரிந்தே, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோட்டாபயவை பதவி விலகுமாறு கோரிப் பிரகனடம் செய்கின்றார்கள் மகாநாயக்கத் தேரா்கள்.

ஆகவே சிங்கள அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, கிளர்ச்சியில் ஈடுபடும் போராட்டக்காரர்களும் இறுதியில் பௌத்த தேசிய சக்திக்கு உட்பட்டவா்களாகவே மாறுவர் அல்லது மாற்றப்படுவர் என்பதைச் சென்ற சனிக்கிழமை தமிழர்கள் புரிந்திருக்க வேண்டும்.
தமிழ்த்தேசியக்கட்சிகள் செய்ய வேண்டியவை
சோசலிச சமத்துவத்துவம் என்று கோசமிட்டு ஆயுதப்போராட்டம் நடத்திய ஜே.வி.பி.இன்று ஜனநாயக அரசியலில் ஈடுபடுவதாகக் கூறிக்கொண்டு பௌத்த தேசியத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் அரச கட்டமைப்பை எவராலும் மாற்ற முடியாது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
அமரர் மங்கள சமரவீர, மகிந்த சமரசிங்க, மிலிந்த மொறகொட,பேராசிரியர் பீரிஸ், தினேஸ் குணவர்த்தன போன்றவர்கள் வெவ்வேறுபட்ட கட்சிகளாக இருந்தாலும், ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து இவர்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் ஒவ்வொன்றும், மங்கள சமரவீரவின் ஆலோசனையுடன் வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் தயாரித்த புள்ளி விபரங்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும்.
இது பற்றி எனது அரசியல் பத்தி எழுத்துக்களை வாசித்தால் புரியும்.
ஆகவே ரணிலா டலஸா என்ற பேச்சுக்களை விடுத்து. வடக்குக் கிழக்குத் தமிழர்கள் முதலில் தமிழ்த்தேசியக் கட்சிகளை மாற்றியமைக்க வேண்டும். அரசியல் கட்சி அல்லாத தேசிய இயக்கம் ஒன்றை உருவாக்கி அழுக்கக் குழுக்களாகச் செயற்பட வேண்டும்.