பிரதேச சபைகளுக்கான தலைவர்களை நியமிப்பதில் குழப்பம் : வாக்கெடுப்பும் ஒத்திவைப்பு
பண்டாரகம, வெலிகம மற்றும் சீதாவக்க பிரதேச சபைகளுக்கான தலைவர்களை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு, தேசிய மக்கள் சக்தியின் உ றுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதல்களைத் தொடர்ந்து, தீர்மானம் இன்றி முடிவடைந்துள்ளன.
பண்டாரகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான மகேஷ் கொத்தலாவல, உள்ளூராட்சி சட்டத்தில் உள்ள விதிகளை மேற்கோள்காட்டி, திறந்த வாக்கெடுப்பைக் கோரினார்.
தேர்தல் காலவரையின்றி ஒத்திவைப்பு
இதனையடுத்து, கூட்டு எதிர்க்கட்சியின் 18 உறுப்பினர்களும், திறந்த வாக்கெடுப்பை வலியுறுத்தினர்.
இருப்பினும், மேல் மாகாணத்திற்கான உள்ளூராட்சி ஆணையர் சாரங்கிகா ஜெயசுந்தர, இரகசிய வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் 16 உறுப்பினர்கள் மட்டுமே இரகசிய வாக்கெடுப்பை ஆதரித்தனர், மீதமுள்ளவர்கள் திறந்த வாக்கெடுப்பை ஆதரித்தனர்.
வாக்கெடுப்பின் போது, தேசிய மக்கள் சக்தியின் 16 உறுப்பினர்களுடன் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர் ஒருவரும் இணைந்தார், இதனால் தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான குழுவின் வாக்குகள் 17 ஆக உயர்ந்தது.
எதிர்க்கட்சி கூட்டணியும் 17 வாக்குகளை பெற்றது. இதன் விளைவாக, வாக்குப்பதிவு 17–17 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
பின்னர் ஆணையாளர், குலுக்கல் மூலம் முடிவை தீர்மானிக்க முன்மொழிந்தார் இருப்பினும், தேசிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஒரு குழப்பமான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் விளைவாக, தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள்
வெலிகமவிலும் இதேபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது, இதன் காரணமாக தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை நடத்த முடியவில்லை.
வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர்.
எதிர்க்கட்சி, தமது இரண்டு உறுப்பினர்களைக் கடத்திச் சென்றதாகக் குற்றம் சாட்டினர்.
சுமார் 200 தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து தென் மாகாண உள்ளூராட்சி ஆணையரை கிட்டத்தட்ட பணயக்கைதியாகப் பிடித்து, தேர்தலை ஒத்திவைக்க கட்டாயப்படுத்தினர் என்று வெலிகம ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதனால் அங்கு தேர்தல் நடந்தப்படவில்லை. இதேவேளை, சீதாவாக்க பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பும் குழப்பம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |