கான்ஃபரன்ஸ் லீக் இறுதிப்போட்டி: ஜெர்மனியில் ரசிகர்கள் இடையே மோதல்!
யுஇஎஃப்ஏ கான்ஃபரன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் நடைபெற்ற நிலையில், இங்கிலாந்தின் கிறிஸ்டல் பேலஸ் மற்றும் ஸ்பெயினின் ராயோ வல்கானோ ஆகிய இரு அணிகளின் ரசிகர்களுக்கிடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது.
இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த முயன்ற ஜெர்மனி பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று(27.05.2026) இரவு நடைபெற்ற இறுதிப்போட்டிக்காக இரு அணிகளின் ரசிகர்களும் லீப்ஜிக் நகரில் குவிந்துள்ளனர்.
காயமடைந்த பொலிஸார்
நேற்று முன்தினம்(26.05.2026) மாலை நகரின் மையப்பகுதியில் உள்ள உணவகங்களுக்கு வெளியே அமர்ந்திருந்த கிறிஸ்டல் பேலஸ் ரசிகர்களை, அங்கு வந்த சுமார் 300 ராயோ வல்கானோ ரசிகர்கள் எதிர்கொண்ட போது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியது.
ரசிகர்கள் ஒருவரையொருவர் பாட்டில்கள், பியர் கிளாஸ்கள் மற்றும் உணவக நாற்காலிகளை வீசித் தாக்கிக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, மற்றொரு பகுதியில் கிறிஸ்டல் பேலஸ் அணியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தீவிர ஆதரவாளர்கள் ஸ்பானிய ரசிகர்களை வம்புக்கு இழுத்து மோதலில் ஈடுபட்டபோது ஃபெடரல் பொலிஸார் அவர்களைச் சூழ்ந்து தடுத்து நிறுத்தினர்.
இந்த மோதல்களைத் தடுக்க முயன்ற கலவரத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மீது இரு தரப்பு ரசிகர்களும் பொருட்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு பொலிஸார் இலேசான காயமடைந்தனர்.
வன்முறையைத் தொடர்ந்து 300ற்கும் மேற்பட்டோரின் அடையாளச் சான்றுகளைச் சோதித்துள்ளதாக லீப்ஜிக் பொலிஸார் நேற்று(27) தெரிவித்துள்ளனர்.
இரு அணிகளுக்கு இடையே மோதல்
கிறிஸ்டல் பேலஸ் மற்றும் ராயோ வல்கானோ ஆகிய இரு அணிகளுமே தங்களது வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஐரோப்பிய தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
இந்தப் போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் வெற்றி பெற்றால், இந்த ஆண்டின் முக்கிய மூன்று ஐரோப்பியக் கோப்பைகளையும் இங்கிலாந்து கிளப்களே வென்ற சாதனைக்கு வழிவகுக்கும்.

கடந்த வாரம் ஆஸ்டன் வில்லா அணி யூரோபா லீகைக் கைப்பற்றிய நிலையில், சனிக்கிழமை(30) நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் அர்செனல் அணி விளையாடவுள்ளது.
இதனால், ஐரோப்பியக் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில், இந்த ரசிகர்களின் வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.