கொழும்பில் விடுதலைப் புலிகளின் பெயரில் கடத்தல், கப்பம் - அநுர அரசின் விசாரணையில் அம்பலமான உண்மை
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல் போன சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
கடத்தல் மற்றும் காணாமல் போதல்
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் பயன்படுத்திய அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களே, இந்தக் கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அரசினால் கைப்பற்றப்படும் வாகனங்களை அரசுடமையாக்குவதற்கான முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
எனினும், அவ்வாறு செய்யப்படாத சந்தர்ப்பங்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போதைய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ள தகவல்களுக்கமைய, இந்த காணாமல் போன விடயங்கள், கப்பம் பெறல் மற்றும் காணி அபகரிப்புகளை நோக்கமாகக் கொண்டே இடம்பெற்றுள்ளன.
காணிகள் மற்றும் வீடுகள்
கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிக வணிக பெறுமதியைக் கொண்ட காணிகள் மற்றும் வீடுகள் பாரிய அளவில் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதற்காகவே அவற்றின் உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா.. என்பது குறித்தும், அவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் தகவல்களைத் திரட்டும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.