வாகனப்பதிவு எண்களை பெற்றுக்கொள்ளாத உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
வாகனப்பதிவு எண்களை பெற்றுக்கொள்ளாத வாகன உரிமையாளர்கள் ஜூன் 30 ஆம் திகதிக்குள் அவற்றினை வந்து பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனப்பதிவு எண்கள் அச்சிடுதல் நிறுத்தப்படுவதற்கு முன்னர் அச்சிடப்பட்ட சுமார் 100,000 வாகனப்பதிவு எண்களின் இருப்பில், 20 மட்டுமே உரிமையாளர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனப்பதிவு எண்கள்
கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட சுமார் 100,000 வாகனப்பதிவு எண்களை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளாததால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் குவித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என்றாலும், இடமாற்றங்களின் போது மாகாணங்களை மாற்றிய வாகனங்களின் பதிவு எண்கள் இவ்வாறு குவித்து வைக்கப்பட்டிருந்ததாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனப் பதிவு எண்களை ஜூன் 30 ஆம் திகதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறும், இல்லையெனில் அவை பழைய இரும்பாக அனுப்பப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எண்களை அகற்ற நடவடிக்கை
இது தொடர்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் உரிமையாளர்களுக்குத் தெரிவித்திருந்தபோதிலும், அந்த காலகட்டத்தில் 20க்கும் குறைவான பதிவு எண்களே உரிமையாளர்களால் எடுத்துச்செல்லப்பட்டதாக அதிகாரி கூறியுள்ளார்.
தற்போது புதிய நிறுவனம் வாகனப்பதிவு எண்களை அச்சிட தொடங்கியுள்ளதால், உரிமையாளர்களால் எடுத்துச்செல்லப்படாத அனைத்து பதிவு எண்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.