உணவு விநியோகம் செய்ய சென்ற ஊழியரை மறித்து உணவு பெற்ற பொலிஸார்
உணவு விநியோகம் செய்ய சென்ற ஊழியரை மறித்து அவரிடமிருந்த இரண்டு உணவு பொதிகளை சுன்னாகம் பொலிஸார் மிரட்டி பெற்றுக் கொண்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலையே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருதனார் மடம் சந்திக்கு அருகில் சீருடையுடன், பொலிஸ் வாகனத்தில் நின்றிருந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸாரே இவ்வாறு உணவை பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சாவகச்சேரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஒருவர் உணவு பெற்றுக்கொள்ள தொலைபேசி ஊடாக பதிவு (ஓடர்) செய்துள்ளார்.
அவருக்கான உணவினை விநியோகம் செய்வதற்காக குறித்த உணவாக ஊழியர் சென்ற போது, மருதனார் மடம் சந்திக்கு அருகில் குறித்த ஊழியரை வழிமறித்த சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அவரிடம் இருந்த இரண்டு உணவு பொதிகளை, மிரட்டி பெற்றுக் கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஊழியரினால் உணவக உரிமையாளருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார் என தெரியவருகிறது.
தனது முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தான் இது குறித்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடமும் முறையிடுவதாக பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த உணவக உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்யும் தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.