யாழில் கறுப்பு ஜூலை கலவரத்தின் நினைவேந்தல்கள் (Photo)
இலங்கையில் 1983 ஆம் நடைபெற்ற கறுப்பு ஜூலை கலவரத்தில் கொள்ளப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழில் பல இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, இன்று (23) கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் காலை 9.30 மணிக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் வன்முறைகளால் உயிரிழந்தவர்களையும் அந்நாட்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட தியாகிகளையும் நினைவுகூறும் வகையில் ஈகைச் சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை தவிசாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல்
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள தூபியில் கறுப்பு ஜீலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
தமிழர்கள் மீதான அடக்குமுறை
இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் கறுப்பு ஜீலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு, மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.மேலும் 1983 கறுப்பு ஜீலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், 39வருடங்களின் முன் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு, திட்டமிடப்பட்ட தமிழர்கள் மீதான வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட உயிர்நீத்த உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை, தற்காலத்திலும் தமிழர்கள் மீதான அடக்குமுறை இடம்பெறுகின்றது. ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் வலியுறுத்தப்பட்டது.
பொலிஸாரின் அச்சுறுத்தல்கள்
இந்நிலையில் யாழ்,பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் நிறைவுபெறும் தருணத்தில் இரண்டு பொலிஸார் மோட்டார் வாகனத்துடன் பிரதானவாயிலருகே உள்நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தும் முகமாக நின்றுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் உள்நுழைந்து கொடிக்கம்பத்தில் கறுப்பு கொடி ஏற்ற வேண்டாம் எனவும் கறுப்பு கொடியை கம்பத்திலிருந்து அகற்றுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன்போது உள்நுழைந்த இரு பொலிஸாரும் வெளியேறினர். பின்னர் அவ்விடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு குறித்த அரைக்கம்பத்தில் பறந்த கறுப்பு கொடியினை காணொளி எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் அவ்விடத்தை விட்டு பொலிஸார் அகன்று சென்றுள்ளனர்.
மாணவர்களின் கண்டனம்
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் அடக்குமுறைகளின் உச்சத்தை தொட்ட இன்றைய கறுப்பு ஜீலை நினைவு தினத்தில் கூட பொலிஸாரின் செயற்பாடு மீண்டும் ஒடுக்குமுறையை இன்றைய நாளில் எடுத்துகாட்டுகின்றது.
பல்கலைக்கழகத்திற்குள் பொலிஸார் மாணவர்களை அச்சுறுத்தும் முகமாக உள்நுழைந்தமைக்கு எமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம் எனவும் மாணவர்களின் சுதந்திரம் பேணப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்தி-கஜிந்தன்







