முல்லைத்தீவு ஊடகவியலாளர்களின் பயணத்தடை தொடர்பில் படைத்தளபதியிடம் எடுத்துரைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கச் செல்ல முடியாத வகையில்,பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட படையினரின் சோதனை நிலையம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதியிடம் முல்லை ஊடக அமையத் தலைவர் ச.தவசீலன் எடுத்துரைத்துள்ளார்.
வீதிச்சோதனை நிலையம் தொடர்பில் 23.05.21 இன்று நிகழ்வு ஒன்றிற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரால் உப்புல் றாஜபக்சவிடமே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளியவளையில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்லவும், வீதியில் 03 ஆம் கட்டைப்பகுதியில் உள்ள படையினரின் வீதி சோதனை நிலையத்தில் கடந்த 20.05.21 ஆம் திகதி தொடக்கம் வீதி ஊடக பலர் தங்களை அடையாளப்படுத்திச் சென்றபோதும், அதில் நின்ற படையினரால் ஊடகவியலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்ச்சியாகப் பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய இடங்களில் ஊடகவியலாளர்கள் தங்கள் அடையாளத்தினை
உறுதிப்படுத்தி வீதியில் பயணிக்க அனுமதிக்கப்பட்ட போதும், 03 ஆம்
கட்டைப்பகுதியில் அமைந்துள்ள வீதிச்சோதனை நிலையத்தில் மாத்திரம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் குறித்த படையினரின் வீதிச்சோதனை நிலையம் ஊடாக ஊடகவியலாளர்கள்
செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

