ட்ரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த FBI அதிகாரி.. வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்
அமெரிக்காவின் முன்னாள் FBI பணிப்பாளர் ஜேம்ஸ் கோமி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் வர்ஜீனியா நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
2025 மே மாதம் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படம் தொடர்பான சர்ச்சையே இந்த வழக்கிற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் கடற்கரை மணலில் கிளிஞ்சல்களைக் கொண்டு "86 47" என்று எழுதப்பட்டிருந்தது.
"86" என்பது ஒருவரை ஒழித்துக்கட்டுவதைக் குறிக்கும் கொச்சையான சொல் என்றும், "47" என்பது 47ஆவது ஜனாதிபதியான ட்ரம்பைக் குறிப்பதாகவும் அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக மறுத்துள்ள ஜேம்ஸ் கோமி, அந்த எண்களின் உட்பொருள் தமக்குத் தெரியாது என்றும், அது ஒரு அரசியல் செய்தியாக இருக்கலாம் என்று கருதியே தான் பகிர்ந்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
வன்முறைக்குத் தான் எதிரானவன் என்பதால் அந்தப் பதிவை நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழக்குப் பதிவு
எனினும், ட்ரம்புக்கு மிரட்டல் விடுத்தல் மற்றும் அச்சுறுத்தலைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை ஒவ்வொன்றும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றங்களாகும். டொனால்ட் ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் கோமி பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்தே இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இது கோமி மீது ட்ரம்ப் நிர்வாகம் தொடுக்கும் இரண்டாவது கிரிமினல் வழக்காகும். முன்னதாக அவர் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த தற்போதைய நடவடிக்கையை ஜேம்ஸ் கோமியின் சட்டத்தரணிகள் "அரசியல் உள்நோக்கம் கொண்ட பழிவாங்கும் நடவடிக்கை" என்று வர்ணித்துள்ளனர்.
சில சட்ட வல்லுநர்களும் அரசியல்வாதிகளும் கூட வெறும் மணல் ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை முன்வைப்பது அமெரிக்க நீதித்துறைக்கு ஒரு தர்மசங்கடமான நிலை என்று விமர்சித்துள்ளனர்.
அதேவேளை, அதிபருக்கு விடுக்கப்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதில் அரசுத் தரப்பு உறுதியாக உள்ளது. இவ்வாறு, இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றுமை முயற்சியைப் பலப்படுத்தும் ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயக் குழு - ஏனைய கட்சிகளுக்குக் கஜேந்திரகுமார் எம்.பி. அழைப்பு