முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மனைவிக்கு எதிராக பிடியாணை உத்தரவு!
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவியான சியாமலி குணவர்தன மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் இந்திக புஷ்பகுமார ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களை உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.
கடத்தல் தொடர்பான வழக்கு
மாலபே சைட்டம் நிறுவனத்தின் மாணவரான நிபுண ராமநாயக்கவைப் பலவந்தமாகக் கடத்திச் சென்று, கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆறாவது பிரதிவாதியாக சியாமலி குணவர்தன பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பிடியாணை உத்தரவு
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வாஸ் குணவர்தன மற்றும் அவரின் மகனான ரவிந்து குணவர்தன உள்ளிட்ட மேலும் 6 பிரதிவாதிகள் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், இரண்டு பிரதிவாதிகள் மன்றில் முன்னிலையாகாமையால், வழக்கு விசாரணையை
எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிவான், இரண்டு
பிரதிவாதிகளுக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.