நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு: ஐக்கிய மக்கள் சக்தியினர் சி.ஐ.டி.யில் முறைப்பாடு!
நிலக்கரி கொள்வனவுக்கான கேள்விப்பத்திர நடைமுறையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று கூறி, அது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ள சர்ச்சைக்ககுரிய குரல் பதிவு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு இந்த முறைப்பாடு இன்று(13.04.2026) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அநுர அரசிற்கு எதிராக குற்றச்சாட்டு
முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தற்போது வெளியாகியுள்ள குரல் பதிவின் மூலம், நிலக்கரி கொள்வனவுக்கான கேள்விப்பத்திரமானது ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

இது பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றார்.
ஊழலை கண்டுபிடிக்குமாறு வலியுறுத்தல்
இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வருண ராஜபக்ச, தற்போதைய அரசின் கீழ் நிலக்கரி கொள்வனவுக்காக கோரப்பட்ட உடனடி கேள்விப்பத்திர நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்தக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ள நபர்கள், உயர்மட்ட அதிகாரம் கொண்ட ஒருவரால் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை அந்தக் குரல் பதிவு வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, உண்மைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

