நகரசபை மதில் உடைந்து வீழ்ந்து பணியாளர் பலி
பாணந்துறை மாநகர சபைக்கு சொந்தமான மதில் ஒன்று உடைந்து வீழ்ந்த சம்பவத்தில் நகர சபையின் பணியாளர் ஒருவர் அதன் அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(13.07.2023) நடைபெற்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பாணந்துறை வலபால பிரதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய அஜித் குமார டி சில்வா என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடல் மீது விழுந்த சுவர்
பாணந்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நகரசபைக்கு சொந்தமான குப்பை கொட்டும் இடத்தின் மதில் சுவருக்கு அருகில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, குறித்த மதில் சுவர் இடிந்து அவரது உடல் மீது விழுந்துள்ளது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றி அவரை மீட்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |