ரணில் மீதான வழக்கில் சி.ஐ.டியின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் வெளியி்ட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது இலண்டனிலுள்ள வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு மேற்கொண்ட பயணம் தொடர்பானதே இந்தச் சர்ச்சையாகும்.
அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க கௌரவப் பட்டம் பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற இந்தப் பயணம், ஒரு தனியார் பயணமாக இருந்தபோதிலும், சுமார் ரூ. 16.6 மில்லியன் முதல் ரூ. 16.9 மில்லியன் வரையிலான அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, பின்னர் மருத்துவக் காரணங்களுக்காகப் பிணையில் விடுவிக்கப்பட்டார். ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன மற்றும் அணுஜ பிரேமரத்ன ஆகியோர் சி.ஐ.டியின் செயற்பாடுகளைக் கடுமையாகச் சாடினர்.
உண்மைத்தன்மை
பல்கலைக்கழகத்தின் அழைப்பிதழ் உண்மையானதா என்பதை அறிய சி.ஐ.டி. மேற்கொண்ட இலண்டன் பயணம் தோல்வியடைந்தது என்றும் அவர்கள் கூறினர். வெளிநாட்டு விசாரணைகளுக்கு அவசியமான 'பரஸ்பர சட்ட உதவிச் சட்டத்தை' சி.ஐ.டி. பயன்படுத்தவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இது ஒரு உத்தியோகபூர்வ பயணத்தின் நீடிப்பு என்றும், ஜனாதிபதியுடன் பாதுகாப்புப் பிரிவினர் செல்வது இயல்பான ஒன்று என்றும் அவர்கள் வாதிட்டனர். எனினும், இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, சி.ஐ.டி. சுதந்திரமாகச் செயற்படும் அதிகாரம் கொண்டது எனத் தெரிவித்தார்.
சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் கருதினால், அதனை அவர்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை நீதிமன்றமே எடுக்கும். ஒவ்வொரு சிறிய விசாரணைக்கும் சட்டமா அதிபரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் சி.ஐ.டிக்கு இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை 90 வீதம் நிறைவடைந்துள்ளது என்று மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்த விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய அழைப்பிதழின் உண்மைத்தன்மை குறித்த இறுதி அறிக்கையைச் சி.ஐ.டி. சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரணிலுக்கு எதிராக முறையான குற்றப்பத்திரிகை எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகின்றது.
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri