பிள்ளையானின் கட்சி தலைமைக்காரியாலயத்தில் இரவு வேளையிலும் தீவிர சோதனை
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் கொழும்பிலிருந்து வருகைதந்த குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகள் இரவு வேளையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்தனர்.
தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
நேற்று(30) காலை 10.00மணிக்கு ஆரம்பமான தேடுதல் பணிகள் மாலை 7.00மணி தாண்டியும் நடைபெற்று வந்துள்ளது. கட்சிக்காரியாலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரிமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
விசாரணைகள்
இதன்போது கட்சி காரியாலயத்தின் பல பகுதிகளிலும் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்தவர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மீது பல்வேறு கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் புலனாய்வு உத்தியோத்தர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பிள்ளையான் மீது இந்த கொலைக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam
