இலங்கையை வந்தடைந்த சீன கப்பல்: இந்திய கடற்பரப்பில் தீவிரமடையும் கண்காணிப்பு பணிகள்
தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் நேற்று(16) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பதுடன், இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல்

இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் சர்வதேச கடல் எல்லையில் அந்நிய ஊடுருவல், சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நுழையும் அகதிகளின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாக கண்காணித்து வருகின்றனர்.
அந்நிய ஊடுருவலை கண்காணிப்பதற்காக சர்வதேச கடல் எல்லை பகுதிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர கண்காணிப்பு வலயத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தீவிரமடையும் கண்காணிப்பு பணிகள்

அதனடிப்படையில் நேற்று காலை முதல் ஹெலிகாப்டர்கள் கடலில் தொடர்ந்து தாழ்வாக பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடிஉள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இலங்கை கடல் பகுதியில் இருந்து சந்தேகத்துக்கிடமான படகுகள் நடமாட்டம் உள்ளதா? அகதி என்ற போர்வையில் எவரும் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக, கீழக்கரை கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ராடர் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் சீன கப்பல் நின்றபடி, இந்தியாவின் பாதுகாப்பு இரகசியங்களை சேகரித்து செல்வது, இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீன கப்பலால் எந்த நாட்டுக்கும் பாதிப்பு வராது

“இதுபோன்ற உளவு கப்பல்கள் வருவது இயல்புதான். கடந்த 2014-ம் ஆண்டு ஒரு உளவு கப்பல் வந்துள்ளது. இந்தியாவின் எதிர்ப்பு குறித்து இந்திய நண்பர்களிடம் தான் கேட்க வேண்டும்”என சீன தூதர் ஜி ஜெங்காங் தெரிவித்துள்ளார்.
சீன கப்பல் தொடர்பில், ஹம்பாந்தோட்டையில் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது,“இந்த கப்பலால் எந்த நாட்டுக்கும் பாதிப்பு வராது. இலங்கையின் தீவிர ஒத்துழைப்புடன் 'யுவான் வாங்-5' கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெற்றிகரமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், இலங்கை ஜனாதிபதியின் பிரதிநிதி, 10-க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கப்பல் எரிபொருளை நிரப்பிச்செல்ல சிறிது காலம் ஆகும். யுவான் வாங்-5 கப்பலின் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப இருக்கும்.
அதன் செயல்பாடுகள், எந்த நாட்டின் பாதுகாப்புக்கும், பொருளாதார நலன்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது. எனவே, எந்த மூன்றாவது நாடும் அதை தடுக்கக்கூடாது.”என தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri