சேதன உர விவகாரம்! - சீன நிறுவனம் காட்டமான அறிக்கை
சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள சேதன உரங்களை, இரு தரப்பினராலும் அங்கிகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரைக் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உரங்களை வழங்கும் சீன நிறுவனமான குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குருப் கம்பனி (Qingdao Seawin Biotech Group Co.) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சேதன உரத் தொகைக்கான கடன் கடிதம் செப்டம்பர் 17 அன்று திறக்கப்பட்டது என்றும் கடன் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விநியோக திகக்கு ஏற்ப செப்டம்பர் 23 அன்று உரத் தொகை அனுப்பப்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
உரத்தின் இருப்பு சரியான நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்காக வாங்குபவர் செயற்கையான தடையை உருவாக்கியதாக சந்தேகிக்க நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது.
இதன்படி, இரு தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர் மூலம் மீண்டும் விசாரணை நடத்தி, உர கையிருப்பில் அர்வினியா பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஒப்பந்தத்தை ரத்து செய்து, உர இருப்புகளை அகற்ற வேண்டும்.
பக்டீரியா இல்லை என உறுதி செய்யப்பட்டால், இலங்கை ஊடகங்கள் உடனடியாக அது தொடர்பான செய்திகளை சரிசெய்து, பொய்யான செய்திகளை வெளியிடுவதற்கான சட்ட நிலை குறித்து ஆராய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், இலங்கை அரசாங்கத்தின் கொள்வனவு செயற்பாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம், அத்துடன், சீன நிறுவனங்களுடனான எதிர்கால கொடுக்கல் வாங்கல்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




