நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சிறுவர்,முதியோர் தின நிகழ்வுகள் (Photos)
உலகளவில் சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு கடந்த 1954ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய அக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் அக்டோபர் முதலாம் திகதி சிறுவர்களுக்குரிய தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
இதேவேளை, இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது. 1990ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதியோர்களாகக் கருதப்படுகின்றனர்.
அம்பாறை
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஏற்பாட்டில் கல்முனை இயேசு சீவிக்கின்றார் சிறுவர் இல்ல சிறுவர்களுக்கான கற்றல் உபகரண தொகுதிகள் இன்று (01.10.2022) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில், கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது. எதிர்காலம் மோசமான நிலையில் சென்று கொண்டு இருக்கின்றது. பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.
தற்போது படிப்புகளில் சிறுவர்கள் கவனம் செலுத்துவதும் குறைவு என நிகழ்வில் கலந்து கொண்ட பொறுப்பதிகாரியினால் அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது சிறுவயது முதல் எமது பிள்ளை செல்வங்களை நாங்கள் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் சிறுவர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற அனைவரும் ஒத்துழைப்புகளை நல்க வேண்டும் என அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உணவுகள் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாறுக் ஷிஹான்
வவுனியா
வவுனியா, குடியிருப்பு சிறுவர் பூங்காவில் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. வவுனியா சிக்கன கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று (01.10.2022) இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களை மகிழ்விக்கும் விளையாட்டு நிகழ்வுகள், சிறுவர்களுக்கான போட்டிகள், சிறுவர்களின் கலை ஆக்கங்கள் என்பவற்றை வெளிப்படுத்தி இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறுவர்களை பாராட்டி மகிழ்வித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.சரத்சந்திர, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் இந்திரா ரூபசிங்க, முன்னாள் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா, சிக்கன கூட்டுறவுச் சங்க தலைவர் மற்றும் பணியாளர்கள், சிறுவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி: திலீபன்
கிளிநொச்சி
சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவர்கள் நினைவாக கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் எழுகை அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் இடம்பெற்றது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இந்த இரத்ததான முகாம் 9வது வருடமாக முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த நிகழ்வில் சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
சேவையாளர் விருது ஈழத்து இலக்கிய மூத்த படைப்பாளி யோகேந்திரநாதனுக்கும், முயற்சியாளர் விருது குரு கணினி மையத்தின் உரிமையாளர் குருபரனுக்கும் கற்பித்த ஆசிரியர் விருது திருமதி தெய்வேந்திரமூர்த்தி ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் வலிகாமம், வடக்கு வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் யாதவன் கிளிநொச்சி வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் அனுஷ்கா, பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் வைத்தியசாலையின் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் குருதிக் கொடையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: எரிமலை
கல்முனை
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் எம்.எச்.எம் அன்ஸார் தலைமையில் இன்று (01.10.2022) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வுக்கு அதிதிகளாக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஏ கலிலுல் ரஹ்மான் ,சிரேஸ்ட உளவளத் துணையாளர் திருமதி ராசிதா நௌசாத், கிழக்கு மாகாண சுற்றுலா துறை பணிப்பாளர் சபை உறுப்பினர் சுலைமாலெவ்வை முஹம்மது நாஸிறூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம் அன்ஸார் நெறிப்படுத்தலில் மாணவர்களுக்கான கலை நிகழ்வுகள், குழு நிகழ்ச்சிகள் என்பன மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
போதைப்பொருள் அற்ற உலகை தமக்கு பரிசாக கையளிக்குமாறு கோரி கிளிநொச்சி,கோரக்கண் கட்டுச்சிறுவர்கள் விழிப்புணர்வு பேரணியொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமான இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவலைப் பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட கோரக்கண் கட்டு கிராமத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிகரித்து காணப்படுகின்ற சட்டவிரோத மதுபான உற்பத்திகளால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அவற்றை தடுத்து தங்களுக்கு போதையற்ற சூழலை உருவாக்கித் தருமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோப்பாய்
கோப்பாயில் இயங்கிவரும் நவமங்கை நிவாசத்தின் நிறுவுனர் ஸ்வர்ணா நவரத்தினம் அவர்களின் நெறிப்படுத்தலில் நவமங்கை நிவாசத்தில் இன்றைய தினம் முதியோர் நிகழ்வு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினருடன் இணைந்து சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
மன்னார்
சர்வதேச சிறுவர்,முதியோர் தினமான இன்று சனிக்கிழமை(1) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் வசித்து வரும் நூறாவது (100) வயதை அண்மையில் பூர்த்தி செய்த சிரேஷ்ட பிரஜையான மனுவேல் சந்தான் என்பவர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.