சர்வதேச சிறுவர் தினத்தை கறுப்புப் பட்டி அணிந்து எதிர்த்த சிறுவர்கள்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சிறுவர்கள் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து தீபம் ஏற்றி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நிகழ்வு புதன்கிழமை(1) மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தையின் முன்னால் நடைபெற்றது.
கிழக்கில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த சனிக்கிழமை(27) அன்று ஆரம்பித்திருந்த நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை(1) மாலை ஐந்தாவது நாளில் நிறைவடைந்திருந்தது.
கரிநாள்
இதன்போது, அதே இடத்தில் சிறுவர்கள் ஒன்று கூடி சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறு ஊர்வலத்துடன் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து கரிநாளாக அனுஷ்டித்து தீப்பந்தம் ஏந்தி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன்போது, கடந்த காலங்களில் காணாமல் சென்ற சிறுவர்களின் நிலைமை குறித்த பல்வேறு கோஷங்களை எழுப்பி குறித்த போராட்டத்தில் சிறுவர்கள் இணைந்து கொண்டனர்.
இதன்போது, கிழக்கின் மூன்று மாவட்டங்களின் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்தியன் தேவி, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீவன் ஆகியோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








