செம்மணியில் இராணுவ வீரரின் தகடு மீட்கப்படலாம்.. விமல் கூறும் ஆரூடம்
செம்மணியில் இருந்து இராணுவ உறுப்பினர் ஒருவரின் தகடு ஒன்று கூட மீட்கப்படலாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட, தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய பாடசாலை பை தொடர்பில் தமது கருத்தினை வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
செம்மணி போர் இடம்பெற்ற பிரதேசம்
கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த இடத்தில் இருந்து, பாடசாலை பை, கண்டுபிடிக்கப்பட்டது போன்று, நாளை இராணுவ உறுப்பினரின் தகடு ஒன்று மீட்கப்படலாம். அப்போது இது தொடர்பில் எதனைக்கூற முடியும் என்று விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, இது குறித்து உடனடி கருத்தை வெளியிடாமல், குறித்த புதைகுழி தோண்டப்பட்ட பின்னர் கருத்தை கூற முடியும்.
குறித்த பிரதேசம் போர் இடம்பெற்ற பிரதேசம். எனவே எந்த தரப்பு இதற்கு காரணம் என்பதை இப்போதே கூற முடியாது. இந்த நிலையில், இலங்கையை பொறுத்தவரையில் நடந்தவற்றை தோண்டிக்கொண்டிருக்காமல் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதே முக்கியம்.
எனினும் இன்று இந்த பிரச்சினையை முன்னிறுத்தி சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை வளர்க்கும் செயற்பாடே மேற்கொள்ளப்படுகிறது என விமல் வீரவன்ச மேலும் சுட்டிக்காட்டினார்.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
