செம்மணி போராட்டத்திற்கு மீண்டும் அழைப்பு
செம்மணி புதைகுழி சர்வதேச கண்காணிப்பின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும், ஆய்வு செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் இணைந்து வலு சேர்க்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பற்றாளர்கள் மட்டுமல்லாமல் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இந்த போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கையறு நிலையில் அரசுகள்
மட்டக்களப்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீதிகோரி இளையோரினால் நமக்காக முன்னெடுக்கப்படும் இந்த அணையா விளக்கு போராட்டத்திற்கு அனையாமல், ஒதுங்காமல் அனைவரையும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயங்களோ, படுகொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் தொடர்பான விடயங்களோ வெளியில் கொண்டுவரமுடியாத கையறு நிலையில் அரசுகள் காணப்படுகின்றன.
இது தொடர்பான விசாரணைகள் சர்வதேச ரீதியில் நடைபெற்றால்தான் உண்மைகள் வெளியில் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்படும் மனித புதைகுழி அகழ்வின்போது 19 எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்டதில் மூன்று குழந்தைகளின் எழும்புக் கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான புதைகுழிகள் அமைக்கப்பட்டுள்ளனவோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை கடந்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையென்றது தொடர் கதையாவுள்ளது. தமிழர்கள் வயது வேறுபாடுகள் இல்லாமல் கொல்லப்பட்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை பார்க்கின்றபோது இதனையே நாங்கள் இனப்படுகொலை என்கின்றோம்.
இதனடிப்படையில் தற்போது இளம் தலைமுறையினைக் கொண்ட அமைப்பானது இந்த விடயத்தினை சர்வதேசத்தின் முன்னிலைக்கு கொண்டு வரவேண்டும், மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் செம்மணி வளைவு உள்ள பகுதியில் எதிர்வரும் 23,24,25ஆம் திகதிகளில் அணையாத தீபம் என்ற கருப்பொருளில் செயற்பாட்டினை மேற்கொள்ளவிருக்கின்றார்கள்.
இது மனித உரிமை மீறலோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாகும். இப்படியான பிரச்சினைகளுக்கு சர்வதேச ரீதியான ஒரு தீர்வைக் காணவேண்டும், சர்வதேச நீதி கிடைக்க வேண்டும், சர்வதேசத்தின் மேற்பார்வையின் கீழ் இந்தப் புதைகுழிகள் அகழப்படும்போதுதான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்ற அடிப்படையில் மக்கள் செயல் எனச்சொல்லப்படுகின்ற இளையோர் தன்னார்வ அமைப்பானது 23,24,25ஆம் திகதிகளில் போராட்டத்தினை மேற்கொள்ளவிருக்கின்றார்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை உள்ளடக்கிய தமிழ் சமூகம், தமிழ் பேசும் சமூகம், பாதிக்கப்பட்டவர்கள் எமது தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் இந்த ஜனநாயக ரீதியான மனிதவுரிமைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.
அணையாத தீபம் என்ற இந்தப் போராட்டமானது எங்களுடைய விடுதலைத் தாகம் அணையாமல் இருந்துகொண்டிருக்கின்றது, மனிதவுரிமை சம்பந்தமான விடயங்களில் நீதி தேடுகின்ற விடயமும் அணையாத தீபமாக எங்களுடைய மனங்களில் இருக்கின்றது என்ற அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மனிதவுரிமைபேரவையின் ஆணையாளர் வோல்கர் டக்கர் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். பல தடுப்புகளுக்கு மத்தியில் அவர் இங்கு வரவிருக்கின்றார்.
அந்த வேளையில் இப்படியான மனிதவுரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்காத விடயங்கள் சம்பந்தமாக போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் இருக்கின்றபோது வடக்கு கிழக்கு என்றில்லாமல் பாதிக்கப்பட்ட உறவுகள், மக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் உங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
