செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு கோரும் சாணக்கியன்
செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் நாளைய தினம் மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக அனைவரும் ஆதரவு வழங்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதி வேண்டும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஒரு சில நாட்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாகவும் அத்தோடு தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதி சம்பந்தமாகவும் அவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையாக யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மாபெரும் அணையா விளக்கு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறான ஒரு போராட்டத்தினை அடையாளமாக நாளைய தினம் மாலை 6 மணிக்கு மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் - கோட்டைக்கல்லாறு பாலத்திற்கு அருகாமையில் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
இந்தப் போராட்டத்திற்கு எங்களுடைய கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளும் அனைத்து உணர்வாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக ஒரு அழைப்பை விடுகின்றோம்.
இந்த போராட்டமானது நாளைய தினம் மாலை 6 மணிக்கு தீப்பந்தங்கள் ஏந்தி பாலத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பித்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக இருக்கின்றோம்.
அந்த வகையில் கட்சி பேதங்கள் இன்றி எங்களுடைய அனைத்து தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்.
உங்கள் அனைவருக்கும் தெரியும், செம்மணியில் மாத்திரம் அல்ல கடந்த காலத்தில் கொக்குத்தொடுவாயிலும் கூட மனிதப் புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் இவற்றிற்கு இதுவரையில் எவ்வித நீதியும் கிடைக்கப்பெறவில்லை.
99ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்காக அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்து விசேட ஒரு குழுவினருடைய ஆதரவையும் அரசாங்கம் கேட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது குறித்த மனித புதைகுழியை விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு போதிய அளவு தேவையான தொழிநுட்ப அறிவு இல்லாமையின் காரணமாக சர்வதேச உதவியை இலங்கை அரசாங்கம் நாட வேண்டும்.
புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் ஊடாக கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி அவர்கள் உயிரிழந்திருக்கின்றமை தெரியவருகின்றது. ஆடைகள் இல்லாமல் இவர்கள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தினர், நேர்மையான விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குக் கிடையாது. அந்த வகையில் குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்கு அனைவரும் அணி திரளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
