சுதந்திரக்கட்சியில் இருந்து சந்திரிக்கா உட்பட 9 பேர் தற்காலிகமாக நீக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட கட்சியின் 9 சிரேஷ்ட உறுப்பினர்கள் அந்த கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவின் ஏகமானதாக தீர்மானத்திற்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஏனைய ஏழு பேர்
இதனடிப்படையில், அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மகிந்த அமரவீர, முன்னாள் பிரதி செயலாளர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, முன்னாள் பிரசார செயலாளர் சாந்த பண்டார, முன்னாள் பொருளாளர் லசந்த அழகியவண்ண, முன்னாள் உப தலைவர்களான சுரேன் ராகவன்,சாமர சம்பத் தஸநாயக்க, ஜகத் புஷ்பகுமார ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்பட்டனர்
கட்சியின் கொள்கை மற்றும் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக அவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழு நேற்று முன்தினம் மாலை கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார். கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் வரை அவர்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள நிமல் சிறிபால டி சில்வா உட்பட சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே இவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.