சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது– சந்திரநேரு சந்திரகாந்தன் கடும் கண்டனம்
பழைமையான தனித்துவமிக்க வாழ்வியலை கொண்ட மக்களை தங்களது சுய இலாபங்களுக்காக இதுவரையில் கவனிக்கப்படாத ஒரு சமூகமாக சர்வதேச தமிழ் ஊடகமொன்று வெளியுலகத்திற்கு சித்தரித்திருப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் அலிக்கம்பை மக்கள் தொடர்பில் சர்வதேச தமிழ் ஊடகமொன்று வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுவதன் மூலம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பழைமையான தனித்துவமிக்க வாழ்வியல்
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அலிக்கம்பை மக்கள் இரு சமூகத்திற்குள் ஒரு மொழிபேசி ஒரு தாய் பிள்ளையாக இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்து ஒற்றுமையாக இதுவரை காலமும் வாழ்ந்து வருகின்றார்கள். 30 வருடகால போராட்ட வரலாற்றிலும் ஒன்றித்து தோள் கொடுத்து நின்றவர்கள்.
இவ்வாறான பழைமையான தனித்துவமிக்க வாழ்வியலை கொண்ட மக்களை தங்களது சுய இலாபங்களுக்காக, இதுவரையில் கவனிக்கப்படாத சமூகம் என சர்வதேச தமிழ் ஊடகமொன்று வெளியுலகத்திற்கு சித்தரித்திருப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தெலுங்கு மொழிபேசும் மக்கள்
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அலிக்கம்பை கிராமமானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமமாகும்.
இங்கு வாழ்ந்து வரும் மக்கள் தெலுங்கு மொழிபேசும் தொன்மையான பிண்ணனியை கொண்ட ஒரு சமூகமாகும். இலங்கையில் பல இடங்களில் இந்த மக்கள் வாழ்ந்து வந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அலிக்கம்பை கிராமத்திலேயே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
தெலுங்கு இந்த மக்களின் உபமொழியாக காணப்பட்டாலும் பெரும்பான்மையாக தமிழ் மொழியில் சரளமாக பேசுவதோடு தமிழ் மொழியிலே கல்வியையும் கற்று வருகின்றனர்.
அபிவிருத்தி
அலிக்கம்பை மக்களிடையே காலத்திற்கு ஏற்ற வகையில் பல்வேறு துறையில் மாற்றங்கள் காணப்பட்டாலும் கல்வியறிவில் தற்போது முன்னேற்றம் கண்ட சமூகமாக மாறி வருகின்றனர்.
அரச தனியார் துறைகளில் பலர் உள்வாங்கப்பட்டும் உள்ளனர். சுயதொழில், மீன்பிடி, விவசாயம் மேசன் ,சாரதி ஓடாவி என பல்வேறுபட்ட தொழில் வகைகளை செய்து வருகின்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்தினூடாக இக்கிராமத்திற்கு பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம், பாடசாலை மற்றும் முன்பள்ளி பாலர் பாடசாலை என பல்வேறு அடிப்படை வசதிகளுடன் இக்கிராமம் தன்னெழுச்சி பெற்று வருகின்றது.
பிழையான சித்தரிப்பு
இங்குள்ள மக்களின் வாழ்வியலில் மாற்றம் வரவேண்டும் என்பதில் இங்குள்ள கல்வி கற்ற இளைஞர் யுவதிகள் அயராது பாடுபடுகின்றனர். இந்தநிலையில் ஒரு சமூக அமைப்பினர் தங்களது சுய இலாபங்களுக்காக முன்னுக்கு பின் முரணாக அந்த மக்களின் வாழ்வியலை சித்தரித்துள்ளனர்.
அத்துடன் இப்பிரதேசே தமிழ் மக்களோடு இவர்களுக்குள்ள உறவுமுறைகளை பிழையான முறையில் சர்வதேச தமிழ் ஊடகமொன்றின் ஊடாக சித்தரித்திருப்பதானது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது” என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.