எரிபொருள் தட்டுப்பாடு: அம்பாறை மாவட்டத்தின் நிலவரம்(Video)
எரிபொருள் மட்டுப்படுத்த நிலையில் வழங்கப்படுவதனால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, சுமார் 2 முதல் 5 கிலோமீட்டர் வரை வரிசையாக தத்தமது வாகனங்கள் உடன் காத்திருந்து எரிபொருளை பெற்றுச்செல்வதுடன் மற்றுமொரு தொகுதியினர் எரிபொருள் தீர்வதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதை அவதானிக்க முடிகின்றது.
அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டத்திற்கான எரிபொருட்கள் சுழற்சி முறையில் வருவதுடன் இணைய வழியூடாக மக்கள் அதனை அறிந்துக்கொண்டு குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்தை வந்தடைகின்றனர்.
அத்துடன் எரிபொருள் நிலையங்களில் எவ்வித ஒழுங்கமைப்புகளும் இன்றி மக்கள் அதிகளவாக குவிந்து காணப்படுவதனால் எரிபொருள் விநியோகம் சீரற்ற முறையில் வழங்கப்படுகின்றது.
இதனால் சில இடங்களில் பொதுமக்கள் மற்றும் எரிபொருள் ஊழியர்களிடையே முரண்பாடுகள் உருவாகின்றன. இதனை தொடர்ந்து இராணுவம் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய அவ்விடத்தில் இருந்து பொதுமக்கள் அகன்று செல்வதை தினமும் காண முடிகின்றது.
வெறிச்சோடிய வீதிகள்
மேலும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று, மருதமுனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, போன்ற பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்கள் தீர்ந்துள்ளமையினால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதுடன் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கல்முனை, மருதமுனை, எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளதென எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்முனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது பகுதியில் எரிபொருள் நிலையங்களில் குழப்பங்களை உருவாக்க முயன்ற நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.