தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சாணக்கியனுக்கு தமிழர் பகுதியில் குவியும் வாழ்த்துக்கள்
இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தின் குழு தலைவராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழர் பகுதியில் பதாதைகள் வைக்கப்பட்டு வருகிறது.
திருகோணமலையில், மாவட்ட உப தலைவரும் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி.விஜய குமார் இவ்வாறு வாழ்த்து பதாதைகள் வைத்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழர் பகுதிகளில் குவியும் வாழ்த்து
அத்துடன், திருகோணமலை- தம்பலகாமத்தில் உள்ள உப தவிசாளரின் இல்லத்தில் நேற்று(05.02.2026) சுவரொட்டி ஓட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமைத்துவங்கள் இவ்வாறு நாடாளுமன்ற குழு தலைவராக தெரிவு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கல்முனை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மிகவும் குறைந்த வயதில் நாடாளுமன்றம் சென்று, நாடாளுமன்ற உறுப்பினரின் குழுக்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இருக்கும் சாணக்கியனுக்கு கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரதான கட்சியாக வடகிழக்கில் திகழும் இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இன்று பாரிய பொறுப்பினை உங்களிடம் இன்று ஒப்படைத்து இருக்கின்றது. இந்த பதவியானது தமிழ் மக்களின் ஏகோபித்த அபிலாசையை தாங்கள் நிறைவேற்றுவீர்கள் எனும் நம்பிக்கைக்கு பாத்திரமாக தாங்கள் திகழ்வீர்கள் என நம்புகின்றோம்.

இந்த கால சூழ்நிலையில் வடகிழக்கில் வடக்கு வேறு தலைமை கிழக்கு தலைமை வேறு எனும் நிலைப்பாட்டிற்கு இன்று கரும்புள்ளி குத்தப்பட்டுள்ளது.
கட்சி மீதான விமர்சனங்களுக்கு முடிவு வேண்டும்..
இது பிரதேசவாத வேற்றுமை காட்டும் கட்சிகளுக்கு பெரும் இடியாகும். அதுவும் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் செய்யப்படும் விமர்சனங்களுக்கு இன்று ஒரு முடிவு கட்டப்பட்டுள்ளது. தங்களின் இந்த பொறுப்பானது சம்மந்தர் ஐயாவிற்கு பிறகு விரைவாக கிழக்கு மண்ணைச் சார்ந்த தங்களுக்கு இந்த வயதில் கிட்டி இருப்பது இரட்டி மகிழ்ச்சியாகும்.
அதேவேளை, கட்சியின் கொள்கைக்குள்ளாக இயங்க தொடங்கிய பின்னரும் கட்சியாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு மக்களை தமிழ்த் தேசியம் என பேசி உசுப்பேற்றி விட்டு இராணுவ ஆட்சிக்கு வித்திடும் நபர்களுக்கும் சிங்களத் தேசத்துக்கு ஆதரவாக தமது நிலைப்பாட்டை மறைமுக இலாபத்துக்காக செயல்படுத்தும் போலித் தேசியவாதிகளின் பின்னடைவு உங்களின் இந்த நியமனத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.
தமிழீழ போராட்டத்தை காட்டி தன்னுடலில் ஒரு துப்பாக்கி இரவைகளையும் கொண்டு உடல் துளைக்காமல் தமது சொந்தங்களின் போராட்டத்தை வைத்து தமிழ் மக்களின் உணர்வினையும் கொண்டு அதன் மூலம் யதார்த்த அரசியலை முடக்கி கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளின் கொட்டம் இதனுடன் அடங்கும் தமிழ் தேசிய சிந்தனை புதிய வடிவில் வடகிழக்கு இளைஞர்களுக்கு பாய்ச்சப்படவும் எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - பாரூக் சிஹான்