வவுணதீவில் மாணவன் உள்ளிட்ட நால்வர் கைது விவகாரம்: பிணை வழங்கப்படும் சாத்தியம் (video)
மாவீரர் தின நிகழ்வின் போது வவுணதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் உட்பட நால்வருக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த நால்வருக்கும் பிணை வழங்க துரித கதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது
கடந்த மாதம் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டதினால் வவுணதீவில் வைத்து மாணவன் உட்பட நால்வர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தை அடுத்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த மாணவனை நாளைய தினம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று பிணை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குறித்த மாணவனின் கோவைகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
