பொருளாதார ஸ்திரப்படுத்தல் உபகுழுவின் புதிய தலைவர் நியமனம்
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான உபகுழுவின் தலைவராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான உபகுழுவின் தலைவராக சம்பிக்க ரணவக்க ஏகமனதாக இன்று ( 7.10.2022) தெரிவு செய்யப்பட்டதாக அவரது ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான உபகுழு
சம்பிக்க ரணவக்கவை நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன முன்மொழிந்த அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோரால் அவருக்கு ஆதரவளிக்கப்பட்டது.
இன்றையதினம் நடைபெற்ற உபகுழுவின் முதலாவது கூட்டத்தில் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தால், பால் உற்பத்தியை உயர்த்துதல், கைத்தொழில் துறையை மறுசீரமைத்தல், உர உற்பத்தி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் போன்றவற்றில் புதிய யோசனைகளைக் கொண்டுவருதல் போன்ற நாட்டின் எதிர்காலத்தைப் பலப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உபகுழுவின் உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுடன் கலந்துரையாடல்
இதன்போது, பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி அந்தந்தத் துறைகள் குறித்த பொருளாதார ஊக்குவிப்பு முன்மொழிவுகள் உள்ளடங்கிய அறிக்கையொன்றை எதிர்வரும் 20ஆம் திகதி தேசிய பேரவையில் சமர்ப்பிக்க உறுப்பினர்கள் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய அந்நியச் செலாவணிப் பிரச்சினை, கடன் மறுசீரமைப்புப் போன்ற விடயங்கள் குறித்து நிபுணர்கள் மற்றும் மத்திய வங்கி, நிதி அமைச்சின் அதிகாரிகளை எதிர்வரும் 13ஆம் திகதி குழுவின் முன்னிலையில் அழைத்து அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளவும் இங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உணவு, சகாதாரம், போக்குவரத்து, வலுசக்தி உள்ளிட்ட துறைகளின் நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதிர்வரும் 14ஆம் திகதி குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உபகுழுவின் கூட்டத்தை எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் கூட்டுவதற்கும் உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
அதன்படி, மூன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குழுவிற்கு தலைமை தாங்குகின்றனர்.
இவர்களில் கபீர் ஹாஷிம் பொதுக் கணக்குகள் (COPA) மற்றும் பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவின் தலைவர் ரணவக்க ஆகியோர் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.