ஸ்ரீ ரங்காவின் வழக்கு விவகாரம்: பொலிஸ் பரிசோதகருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா வழக்கில் சாட்சியங்களை மறைக்க முயன்ற பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2011ஆம் ஆண்டு வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா செலுத்திச் சென்ற ஜீப் வண்டி விபத்திற்குள்ளானதில் பயணித்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பீ அறிக்கை போலியானது என தெரியவந்துள்ளது.
இது குறித்து வவுனியா மேல் நீதிமன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கில் சாட்சியங்களை மறைக்க முற்பட்ட பொலிஸ் பரிசோதகர் ரொசான் சஞ்சீவ 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 24 மாதகால சிறைத்தண்டனை வழங்கி, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிகாஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீ ரங்காவிடம் விசாரணை
கொல்லப்பட்ட அதிகாரியே வாகனத்தைச் செலுத்திச் சென்றதாகக் கூறி வவுனியா நீதிமன்றத்தில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அப்போது செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் ரொசான்சஞ்ஜீவ கையெழுத்தைப் போலியாக இட்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விபத்து 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி செட்டிக்குளம் பிரதேசத்தில் மாலை 4.30 அளவில் நடந்துள்ளது.
ஸ்ரீரங்கா செலுத்திச் சென்ற லேண்ட் கிறசர் ரக ஜீப் வண்டியே மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற பொழுது ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி, செட்டிக்குளம் வைத்தியசாலையின் மதில் சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஸ்ரீ ரங்காவின் பாதுகாப்புக்காக இணைக்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உறுப்பினர் புஸ்பகுமார என்பவர் உயிரிழந்துள்ளார்.
எனினும் ஸ்ரீ ரங்காவிடம் விசாரணை நடத்திய போது தான் வாகனத்தைச் செலுத்திச் செல்லவில்லை எனக் கூறியுள்ளார். இது தொடர்பில் முக்கிய சாட்சியங்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
போலியான ஆவணங்கள்
இதனைத் தொடர்ந்து விசாரணைகளில் மூலம் கிடைத்த அனைத்து சாட்சியங்களும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் படி உடனடியாக அடுத்த கட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ளது.
நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் பொலிஸ் பரிசோதகர் ரொசான்சஞ்ஜீவ ஸ்ரீ ரங்காவை காப்பாற்றுவதற்காகச் சாட்சியங்களை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது.
அதாவது முதலாவது குற்றமாகக் குற்றவாளியின் குற்றங்கள் மறைக்கப்பட்டுத் தப்பிக்க வைத்த குற்றத்துக்காக 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாதகால சிறைத்தண்டனையும்,
போலியான ஆவணங்களைத் தயாரித்தமைக்காக 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாதகால சிறைத்தண்டனையும்,
மூன்றாவது குற்றச்சாட்டாகப் போலியான ஆவணங்கள் தயாரித்து உயர் அதிகாரிகளை ஏமாற்றிய குற்றத்துக்காக 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 12 மாதகால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவத்தில் கொல்லப்பட்ட அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி புஸ்பகுமாரவின் மனைவிக்கு நட்டஈடாக ஐந்து இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை உடனடியாக இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு மிகுதி ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வழங்கப்பட வேண்டும் என திகதியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



