ஈழத் தமிழர்களின் விடுதலை உணர்வை உங்களால் உடைத்தெறிய முடியாது! காசி ஆனந்தன் கடும் கண்டனம்
எத்தனை ஆயிரம் உடைப்புக்களை நீங்கள் செய்தாலும் ஈழத் தமிழர்களின் விடுதலை உணர்வை உங்களால் எந்தக் காலத்திலும் உடைத்தெறிய முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவரும் கவிஞருமான காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிப்புச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை உடைத்தெறிந்து சிங்களப் படைகள் ஆடிய இனவெறியாட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சிங்கள இனவெறி ஆட்சியாளர் கடந்த காலங்களில் தமிழ் மாவீரர்களையும் -மக்களையும் கொன்று அவர்கள் உடல்களை உடைத்துப் போட்டார்கள். அதில் நிறைவு காணாது அவர்களைப் புதைத்த கல்லறைகளை உடைத்துக் கொட்டினார்கள். அதிலும் நிறைவு காணாது இப்போது அவர்களின் நினைவுச் சின்னங்களை உடைத்தெறிகிறார்கள்.
எத்தனை ஆயிரம் உடைப்புக்களை நீங்கள் செய்தாலும் ஈழத் தமிழர்களின் விடுதலை உணர்வை உங்களால் எந்தக் காலத்திலும் உடைத்தெறிய முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
3 இலட்சம் தமிழர்களைச் சிங்களப் படைகளினதும் சிங்களக் காடையர்களினதும் கொலை வெறிக்கு உயிர்ப்பலி ஆக்கி, 40 ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் -மாவீரர்களின் -உயிர்களை விடுதலைப் போர்க்களத்தில் விதைத்து, 10 இலட்சம் தமிழீழப் பெண்களின் மீதான சிங்கள வெறியர்களின் பாலியல் வன்கொடுமையையும் சாவையும் தாங்கி, 90 ஆயிரம் தமிழீழப் பெண்களின் சிங்கள இனவெறிப் போரின் விளைவான விதவைக் கோலத்தைப் பார்த்து, 2 இலட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்களின் வீடுகளைச் சிங்கள வான்படையின் குண்டு வீச்சுக்கு இலக்காக்கி, 10 இலட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு ஏதிலிகளாய் ஓடக் கண்டுகுமைந்து, 400க்கும் அதிகமான இந்துக் கோயில் யுத்த வெறிச்சிங்களத்தின் குண்டு வீச்சில் உருக்குலைந்து சிதறுவதையும் சந்தித்து, நாங்கள் வளர்த்தெடுத்த ‘விடுதலை இயக்கத்தை’எப்படி நீ உடைத்தெறிவாய்?இந்திய வெளியுறவு அமைச்சர் மாண்புமிகு ஜெயசங்கர் அவர்கள் இலங்கை சென்று கோத்தபய ராஜபக்ச அவர்களோடு உரையாடி, ‘ஈழத் தமிழர்களுடைய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்’என்று வேண்டுகோள் வைத்துத் திரும்பிய 24 மணி நேரத்துக்குள் ஈழத் தமிழர்களுக்குச் சிங்கள இனவெறி அரசு வழங்கியுள்ள முதல் உரிமை யாழ் பல்கலைக் கழக முள்ளிவாய்க்கால் சின்னத்தின் உடைப்புத்தான். இந்நடவடிக்கை ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல் அல்ல-‘இந்திய அரசின் முகத்தில் விழுந்த அறை’என்பதை இந்திய அரசு புரிதல் வேண்டும்.
இந்தியாவை திட்டமிட்டே இலங்கை முதல்வர் கோத்தபயா களங்கப்படுத்தியிருக்கிறார். ;இலங்கை வந்து பேசி எதைக் கிழித்துவிட்டுப் போகிறாய்? நாங்கள் நினைத்ததைத்தான் செய்வோம்’என்று முள்ளிவாய்க்கால் சின்னத்தை உடைத்தெறிந்து வெறியாடியிருக்கிறது சிங்கள அரசு.
பகலில் வந்து முள்ளிவாய்க்கால் சின்னத்தை உடைக்காது -இரவில் மின்விளக்கையும் அணைத்துவிட்டு இருளில் பதுங்கி வெறியாடிய உங்கள் பச்சைக் ‘கோழைத்தனம்’பகிடியாகவும் இருக்கிறது.உலகெங்கும் பரவி வாழும் 50 இலட்சம் ஈழத் தமிழர்கள் சார்பிலும் தமிழகம் உட்பட உலகனைத்தும்வாழும் 10 கோடி தமிழர்கள் சார்பிலும் உறுதியாக நான் பதிவு செய்ய விரும்புவது இதுதான்:-‘மாணவர்களை உங்கள் நடவடிக்கை மீண்டும் புலிகளாய் மாற்றும்.’‘நெருப்போடு விளையாட்டு நெடுநாள் நிலைக்காது.’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
