பயணத்தடை அனுமதியை தவறாக பயன்படுத்தும் வியாபார நிலையங்களின் அனுமதியை இரத்து செய்ய கோரிக்கை
பயணத்தடை அனுமதியைத் தவறாக பயன்படுத்தி வியாபார நிலையங்களைத் திறந்து வைத்து விற்பனை செய்பவர்களின் அனுமதியை இரத்து செய்தல் வேண்டும் எனவும், பாஸ் அனுமதியைத் தவறாக பயன்படுத்துபவர்களுக்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் தற்போதைய கோவிட் நிலைமைகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இக் கலந்துரையாடலில் வைத்திய அதிகாரிகளிடம் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கேட்டறியப்பட்டதோடு, அவர்கள் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், பயணக்கட்ப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை மற்றும் கோவிட் தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் சுகாதார பிரிவினர் கோவிட் கட்டுப்படுத்துவதற்காகப் பல வழிகளிலும் கஷ்டப்படும் நிலையில் அவர்களுடன் இராணுவத்தினரும், பொலிஸாரும் கட்டாயம் இணைந்து கொள்ளல், மரக்கறி உட்பட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வதை உடன் கண்காணித்து நிறுத்தப்படல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் 5000 ரூபா பணத்தைப் பெறும் வறுமைப்பட்டவர்களிடம் இன்சூரன்ஸ் மற்றும் லீசிங் நிறுவனங்கள் பணம் வசூலிப்பதற்குத் தடைவிதித்தல், 5000 ரூபா பணத்தை தமது அலுவலகத்தில் கொடுப்பது மட்டுமல்லாது அனைத்து கிராமங்களிலும் ஓர் இடத்தை தெரிவு செய்து வழங்குதல், அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படல், வியாபார நிலையங்களைத் திறந்து வைத்து விற்பனை செய்பவர்களின் அனுமதியை இரத்து செய்தல், பாஸ் அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தல் போன்ற பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான குலசிங்கம் திலீபனால் அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுத் தலைவருமான
கு.திலீபன், அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் எனப்
பலரும் கலந்து கொண்டுள்ளனர்.