கிரீன்லாந்தின் தலைநகரில் தூதரகங்ளை திறந்துள்ள இரு முக்கிய நாடுகள்
நேட்டோ (NATO) நட்பு நாடுகளான கனடாவும் பிரான்ஸும் கிரீன்லாந்தின் தலைநகர் நூக்கில் (Nuuk) தங்களது புதிய தூதரகங்களை நேற்று (6.2.2026) திறந்துள்ளன.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க விரும்புவதாக அல்லது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கனடாவின் கவர்னர் ஜெனரல் மேரி சைமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நூக் நகருக்குச் சென்று புதிய தூதரகத்தைத் திறந்து வைத்தனர்.
சீனாவின் அச்சுறுத்தல்
கனடாவின் கடலோர காவல்படை கப்பலான 'ஜீன் குட்வில்' (Jean Goodwill) இந்தப் பயணத்தில் உடன் சென்றது. இதே நாளில் பிரான்ஸும் தனது தூதரகத்தைத் திறந்துள்ளது.

கிரீன்லாந்தில் தூதரகம் அமைக்கும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு பிரான்ஸ் ஆகும். கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் ரஷ்யா அல்லது சீனாவின் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் ட்ரம்ப் கூறி வந்தார்.
இதற்காக டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் மீது வரி (Tariff) விதிக்கப்போவதாகவும் அவர் மிரட்டினார். இந்தத் தூதரகங்களின் திறப்பு விழாவில் பேசிய மேரி சைமன், "கிரீன்லாந்து மக்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள்; அவர்களுக்கு கனடா உறுதுணையாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
முக்கிய நடவடிக்கை
இது டென்மார்க்கின் இறையாண்மையையும், கிரீன்லாந்து மக்களின் சுயாட்சியையும் அங்கீகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

ஆர்க்டிக் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம் மற்றும் புதிய கடல்வழிப் பாதைகள் காரணமாக, இந்தப் பகுதி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரம்பின் "ஆக்கிரமிப்பு" பேச்சுகள் நேட்டோ கூட்டணிகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்திய நிலையில், கனடா மற்றும் பிரான்ஸின் இந்த நடவடிக்கை டென்மார்க்கிற்குப் பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.