தவெக தலைவர் விஜய்க்கு கேக் வெட்டி கொண்டாட்டம் - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இலங்கை மக்கள்
தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதற்கு இலங்கை மக்கள் கிண்ணியாவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்த கொண்டாட்டம் நேற்று(04.05.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை - நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த முன்னால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் இம்ரான் தலைமையில் இந்த கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, வருங்கால தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தவெக தலைவர் விஜயை வாழ்த்திய ஈழத்தமிழர்கள்
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மிகப்பெரிய சரித்திர வெற்றியைப் பதிவு செய்து, முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு இலங்கை மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
. புதுமுக அரசியல் கட்சியாகப் புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து, பல்வேறு நெருக்கடிகளையும் சோதனைகளையும் கடந்து, தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை தவெக பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்வுரிமை மற்றும் அரசியல் அபிலாசைகள் குறித்த உங்களது தெளிவான நிலைப்பாட்டினை நாம் கூர்ந்து கவனித்து வருவதாகவும், தொப்புள்கொடி உறவுகளான எமது மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக்கான பயணத்திலும், சர்வதேச அரங்கில் எமக்கான நீதியைப் பெற்றுத்தரும் முயற்சியிலும், உங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்னின்று ஒத்துழைப்பு வழங்கும் என ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்றும் இலங்கை மக்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக தகவல் - தேவந்தன்
யாழ்ப்பாணம்
இளைய தளபதி விஜய்யின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், இன்றையதினம்(05) யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்தோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், வெற்றியை கொண்டாடும் முகமாக கொடிகள் பறக்க விடப்பட்டதுடன், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன.
தேர்தலுக்கு முன்னரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து காக்கைதீவு பகுதியில் கொடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் - கஜீ