மைத்திரி தரப்புக்குள்ளும் பிளவு? அமைச்சரவை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள தாமதம்?
இலங்கையின் நிலையற்ற அரசியல் சூழ்நிலையில், அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம், ஒரு மாதக்காலத்துக்கு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே திட்டமிட்டப்படி, விவசாயம், மீன்பிடி, பெருந்தெருக்கள் மற்றும் சுற்றாடல்துறை அமைச்சுக்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, அரசாங்கத்தில் இருந்து விரைவில் வௌியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அந்தக்கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பின்னரே அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என்று அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஏற்கனவே, அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
கூட்டணி ஒன்றை அமைத்து அடுத்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாத நிலையும் நிலவுகிறது.
அதில் சிலர் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் ஏற்கனவே அரசாங்கத்துக்கு உதவும் சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் உள்ளீர்த்து அவர்களுக்கு பிரதியமைச்சுக்கள் மற்றும் ராஜாங்க அமைச்சுக்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.


