கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் அடக்கம்
கொழும்பில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தினேஷ் சாப்டரின் பூதவுடல், கொழும்பு மலர் வீதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்த்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
வாக்குமூலம் பதிவு
கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து கொலைச் சம்பவம் தொடர்பில் சுமார் 23 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் இருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது, கையடக்க தொலைபேசி கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வர்த்தகரிடம் இருந்து பெறப்பட்ட 143 கோடி ரூபா கடன் தொகை தொடர்பில் நிலவி வரும் சர்ச்சை தொடர்பில் அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.