வரவு செலவுத் திட்டத்தில் வன்னிப் பிரதேசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கப்படும்: கு.திலீபன்
வரவு செலவுத் திட்டத்தில் வன்னிப் பிரதேசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன் (K. Dileep) தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி முன்பள்ளி, ஆரம்பகல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் “அனைத்துக்கும் முன்னுரிமை குழந்தைகள்” எனும் தொனிப் பொருளில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்தி திட்டங்கள் என்பது இன்னமும் எமது நாட்டில் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கையில் எமது நாடு முன்னிலையில் உள்ளது. இதற்கு ஜனாதிபதி அவர்களின் வழிநடத்தலில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டமையே காரணம்.
வடமாகாணத்தில் குறிப்பாக வன்னிப் பிரதேசம் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பிரதேசம் 90 வீதமான கிராமங்கள் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட கிராமங்கள்.
வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் வன்னிப் பிரதேசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கி தருமாறு அமைச்சரிடமும், அமைச்சின் செயலாளரிடமும் கோரியுள்ளேன்.
அதனை செய்து தருவதாக கூறியுள்ளார்கள். எமது மாவட்டத்தின் வளர்ச்சி தொடர்ந்தும் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது சிறுவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெண் முயற்சியாளர்கள் ஆகியோருக்கு கல்வி மற்றும் தொழில் முயற்சிக்கான உதவித் திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி (Jayakennedy) தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர(B.A. Sarathchandra), சிறுவர் பெண்கள் அபிவிருத்தி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர், இராஜாங்க அமைச்சரின் வடக்கு- கிழக்கு இணைப்பாளர், மாவட்ட செயல சிறுவர் பிரிவு அதிகாரிகள், உதவிப் பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.